Wednesday, December 27, 2017

தீ!


சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார்.

அவர் படிக்க ஆரம்பித்தால் கேள்வியையும் சேர்த்துப் படித்துத் தான் மனனம் செய்வார்.

தொடர்பு படுத்துக... 
தூல... கிணறு
தூல... கிணறு
தூல... கிணறு

"என்னடா அது?" வாங்கிப் படித்தேன். அங்கு துலா இல்லை; தூல தான் இருந்தது. முன்பின்னாக மாற்றி எழுதியிருந்தார்.

அடுத்த வரி ஆரம்பம்...
நெருப்பு... தீட்டுபட்டி...
நெருப்பு... தீட்டுபட்டி... 
நெருப்பு... தீட்டுபட்டி... 

கொப்பியைப் பிடுங்கிப் பார்த்தேன். இப்படித் தான் இருந்தது.
"ஆசிரியை கரும்பலகையில் அப்படித்தான் எழுதினார்," என்றார் சின்னவர். திருத்திச் சொல்லிக் கொடுத்தேன்.

மூன்று வருடங்கள் கழித்து அதே பாடசாலைக்கு மாற்றலாகிப் போனபின் ஓர் நாள் - தற்செயலாக அந்த ஆசிரியையின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். கரும்பலகையில் அதே... தீட்டுபட்டி என்னை வரவேற்றது. ;) ஆசிரியையின் எழுத்து உறுப்பாக இல்லை; 'ப்' பாதியில் நின்று 'ட்' ஆகத் தெரிந்தது. ' பெ' அதே போல... அரைகுறையாக எழுதி 'டுப' ஆகி இருந்தது. :-)
~~~~~~~~
கீழே பெட்டியிலுள்ளவை என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

இவையும் கிட்டத்தட்ட‌ தீப்பெட்டிகள் தான்.
வில்லைகள் பற்றி விஞ்ஞான பாடத்தில் படிக்கும் பொழுது வில்லையைக் காட்டி சருகுகளை எரித்திருக்கிறேன். நல்ல வேளை ஒரு பொழுதும் பெரு நெருப்பாகிப் பரவவில்லை.

இந்த வில்லை நெருப்பு யோசனையை, சுனாமியை மையமாக வைத்து வெளிவந்த தமிழ்ப் படம் ஒன்றில் பயன்படுத்தியிருந்தார்கள். படத்தின் தலைப்பு நினைவுக்கு வரவேயில்லை.

பழைய கற்கால மனிதன் கல்லைத் தட்டி நெருப்பு வர வைத்தான்.

மஓறிகள் இரண்டு கட்டைகளை உரசி தீ வர வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒரு கட்டை கிட்டத்தட்ட 30 சென்ரிமீற்றர் அளவு நீளமாக வள்ளம் போன்று இருக்கும். இரண்டாவது நீளமாக, கூராக இருக்கும். 

வள்ளத்தின் பள்ள‌த்தில் நீண்ட‌ குச்சை செங்குத்தாக வைத்துப் பிடித்து உரச உரச வெப்பம் ஏறி, அது புகைய ஆரம்பிக்கும். அந்தச் சமயம் சருகுகளை அதன் மேல் போட மெதுவே தீ பற்றிக் கொள்ளும்.

இங்கு படத்திலுள்ளவற்றில் குச்சுகளை மத்தால் கடைவது போல‌ சுழற்ற‌ வேண்டும். மெதுவே புகைக்க‌ ஆரம்பிக்கும். 

மஓறிகள் இங்கு வந்த ஆரம்பத்தில் இருந்த பெரிய‌ பிரச்சினை தீ. குளிரைப் போக்க‌ வெப்பம் வேண்டும். தீ இல்லாமல் எப்படி! இங்கோ குளிர் ஈர‌ விறகுகளை வைத்துக் கொண்டு சமாளிக்க‌ வேண்டும். 

ஒரு தடவை இப்படி தீ மூட்டினால் பிறகு அதனை நாட்கணக்கில் தொடர்ந்து அணையாமல் வைத்திருக்கும் வேலை சின்னவர்களது.